அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து யாழ். மாநகரசபையிடம் கையளிக்கப்பட்ட யாழ். நகர் தென்கரையோர வீதிகளை புனரமைக்கும் பணிகளை யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மேற்கொண்டுள்ளார்.
பாஷையூர் மீன்சந்தை முதல் கொழும்புத்துறை ஊடாக துண்டிச்சந்தி வரையான கடற்கரை வீதியே தற்சமயம் துரித புனரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னர் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து தற்சமயம் பொதுமக்களின் பாவனைக்கென மேற்படி வீதிகள் திறந்து விடப்பட்டுள்ளபோதும் அவ்வீதியானது பாவனைக்குதவாத வகையில் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. மேலும் இவ்வீதியில் அமைந்துள்ள மூன்று பாரிய வடிகான்களும் முற்றாக சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
இதனையடுத்து யாழ். மாநகரசபை முதல்வர் யாழ். மாநகரசபை ஊடாக விசேட நிதியொதுக்கீட்டினை மேற்கொண்டதன்மூலம் வீதி செப்பனிடும் பணிகள் துரித கதியில் ஆரம்பமாகியுள்ளன. கடற்கரை வீதியானது புனரமைப்பு செய்யப்படும்.
அதேவேளை வீதியில் அமைந்துள்ள மூன்று வடிகான்களுக்கு மேலாக பாரிய கொன்கிரீட் மதகுகள் நிர்மாணிக்கப்படும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. இன்றுகாலை அப்பகுதிக்கு சென்று புனரமைப்பு பணிகளைப் பார்வையிட்ட யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அப்பணிகளை துரிதப்படுத்தும் பணிப்புரைகளையும் வழங்கினார்.
யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். கரையோரப்பகுதிகளுக்கு சென்று வீதி புனரமைப்பு பணிகளை இன்றையதினம் பார்வையிட்டபோது யாழ். மாநகரசபை பொறியியல் பிரிவைச்சேர்ந்த மேற்பார்வையாளர் ஆர்.எஸ்.சேவியர் மற்றும் களமேற்பார்வையாளர் பீ.ஜெயராஜா ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment