தெல்லிப்பளையில் ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை ஆகியன அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு யாழ்.நகரில் இராணுவத்தின் புதிய சிவில் நிர்வாக அலுவலகத்தை நேற்றுத் திறந்து வைத்துப் பேசுகையில், இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா தெரிவித்தார்.
தெல்லிப்பளையில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகள் சிலவும் பயிர்ச்செய்கை நிலங்களும் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறினார்.
இராணுவத் தளபதி மேலும் தெரிவித்ததாவது:
கடந்த பல வருடங்களில் பல உயிர்களை இழந்து போர் சூழலில் வாழ நேர்ந்தது. இலங்கை மக்களாகிய நாம் அவ்வாறன ஒரு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக குறிப்பாக 1971ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் திருநாட்டினது ஒருமைப்பாட்டையும் தேசிய உணர்வுகளையும் சீரழிக்கின்ற ஆயுத கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஆத்ம பலத்தை பெற்றுள்ளோம்.
ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற எண்ணக் கருவின் அடிப்படையில் வடக்கின் வசந்தம் என்ற சொத்தை அபிவிருத்தி செய்வதற்கு நீங்கள் அனைவரும் முனைப்புடன் உள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சாந்தியும் சமாதானத்துடனும் சந்தேகமெதுவுமின்றி சுதந்திரமாக வாழ்வதற்கு அவசியமான சூழலை உருவாக்கியுள்ளோம். தற்போது யாழ்.மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடி களும், சிறு சோதனைக் குடிசைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை ஊரடங்குச் சட்டமும் முழுமையாக நீக்கப்பட்டு மக்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தெல்லிப்பளை மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வீடுகள், பயிர்ச்செய்கை நிலங்கள் போன்றன மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு மீன்பிடித் தொழிலாளர்களின் பிரச்சினைகளை நீக்கவும் பாதுகாப்பு இடையூறுகளை நீக்கவும் இலங்கை அரசும் பாதுகாப்பு அமைச்சும் நடைமுறைகளை வகுத்துள்ளன என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment