யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள இந்த கருமபீடத்தின் ஊடாக உல்லாசப்பணிகளுக்கு வேண்டிய சகல தகவல்களையும் பெறமுடியும் என உல்லாசப்பயணத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஏ9 வீதி போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டதன் பின்னர் கடந்த இரு மாதங்களில் மட்டும் 3 லட்சம் வரையிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பயணிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் யாழ்பாணக் குடாநாட்டில் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளோர் விவசாயிகள் வர்த்தகர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மேலதிக வருமானத்தைப் பெறக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மரக்கறி பழவகைகள் கைப்பணிப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் அதிக லாபத்தை பெறக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வட பகுதிக்கும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் இடையே வர்த்த நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வர்த்தக கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2010 என்ற பெயரிலான இந்த கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியில் இந்திய வர்த்தகர்களும் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment